செய்திகள்
சேலத்தில் சிமெண்டு கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயற்சி- ரவுடிகள் உள்பட 5 பேர் கைது
சேலத்தில் சிமெண்டு கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடிகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். கார்த்திக் நேற்று முன்தினம் குமரகிரி பைபாஸ் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது மொபட்டை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கார்த்திக்கிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது. அப்போது அவர் சத்தம் போட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வருவதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக்கை மிரட்டி பணம் பறிக்க முயன்றது பிரபல ரவுடிகளான வாழப்பாடி அருகே உள்ள கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த விஜயன் (45), அஸ்தம்பட்டியை சேர்ந்த கரிகாலன் (32) மற்றும் கிச்சிப்பாளையம் நாராயணநகரை சேர்ந்த விவேக் (30), மயிலாடுதுறையை சேர்ந்த பிரதீப் (23), சேது (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.