செய்திகள்
கோப்புபடம்

திண்டுக்கல் மாநகராட்சியில் கடைகள் ஏலத்தை முறையாக நடத்தக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்

Published On 2020-08-13 15:09 GMT   |   Update On 2020-08-13 15:09 GMT
திண்டுக்கல் மாநகராட்சியில் கடைகள் ஏலத்தை முறையாக நடத்தக்கோரி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் 28 கடைகள் மற்றும் கட்டண கழிப்பறைகள், மாநகராட்சி ஆடுவதை கூடம், குமரன்பூங்கா மற்றும் அதன் அருகில் உள்ள கழிப்பறை ஆகியவற்றின் கட்டணம் வசூல் ஆகியவற்றுக்கான குத்தகை நேற்று ஏலமிடப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதில் ஏலம் எடுப்பவர்கள் நேற்று முன்தினத்துக்குள் (செவ்வாய்க்கிழமை) முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் முன்வைப்பு தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஏலத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே நேற்று திண்டுக்கல் நகர தி.மு.க. செயலாளர் ராஜப்பா தலைமையில் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதையடுத்து கமிஷனர் செந்தில்முருகன், தி.மு.க. வினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடைகள் உள்ளிட்டவற்றை முறையாக ஏலமிட வேண்டும். இதற்காக 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்ய வேண்டும். பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும். அதன்பின்னரே ஏலம் விட வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது நேற்று நடைபெறுவதாக இருந்த ஏலம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதோடு முறையாக ஏலம் நடைபெறும் என்றும் கமிஷனர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News