செய்திகள்
கடையநல்லூர் அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம்
கடையநல்லூர் அருகே செவ்வாழை, ரஸ்தாளி உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் பலத்த மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் கடையநல்லூர் அருகே வடகரை, அச்சன்புதூர், கரிசல்குடியிருப்பு, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் சூறைக்காற்று வீசியது.
இதனால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த செவ்வாழை, ரஸ்தாளி உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். எனவே சேதம் அடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.