செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வினியோகம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 8-ம் வகுப்பு பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நடைபெற்றது.
தர்மபுரி:
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதன்தொடர்ச்சியாக 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்றது.
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் தலைமை தாங்கி விலையில்லா பாட புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கினார். இதில் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி மாணவிகள் வரிசையில் காத்திருந்து பாட புத்தகங்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் தர்மபுரியில் உள்ள அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் பாட புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பாட புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட்டன.