செய்திகள்
வேலாயுதம்பாளையம் அருகே காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
வேலாயுதம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சுருளிவேல் (வயது 52). இவர் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், சுருளிவேல் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக காகித ஆலைக்கு வந்தார். பின்னர் காகித ஆலை வாகன நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் சுருளிவேலை மீட்டு சிகிச்சைக்காக காகிதஆலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுருளிவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுருளிவேல் மகன் கோகுல்பிரசாத் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுருளிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.