செய்திகள்
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை கடந்தது
முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பல துறைகளில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.74 உயர்ந்து ரூ.4978 -க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.39824க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 41816 ரூபாய்க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு 3.90 ரூபாய் உயர்ந்து 70.80 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று பிற்பகல் தங்கத்தின் விலையில் மேலும் உயர்வு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை கடந்துள்ளது. சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து ரூ.40,104க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 109 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5013க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ரூ.70.90 ஆக உள்ளது.