செய்திகள்
ஜெயராஜ் மகள் பெர்சி

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை- நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்

Published On 2020-07-27 04:17 GMT   |   Update On 2020-07-27 04:17 GMT
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று வழங்கினார்.
சென்னை:

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின்போது கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சோதனையில் இருந்து மீள்வதற்காக அரசு தனக்கு பணி வழங்கியிருப்பதாக கூறினார். தன் தந்தை, சகோதரர் மரணத்தில் நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

கொலை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News