செய்திகள்
நகை கொள்ளை

குளச்சல் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

Published On 2020-07-26 09:49 GMT   |   Update On 2020-07-26 09:49 GMT
குளச்சல் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில், பூட்டை உடைத்து 16½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குளச்சல்:

குளச்சல் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குருபாத ஜாண்சன் (வயது 82). இவர் கூட்டுறவுத் துறையில் சார் பதிவாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுகந்தி, ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது.

நேற்று முன்தினம் குருபாத ஜாண்சன், தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு மார்த்தாண்டத்தில் உள்ள மகளை பார்க்க சென்றார். அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 16½ பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்க பட்டிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து குருபாத ஜாண்சன் குளச்சல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News