செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம்- முதலமைச்சர் கண்டனம்

Published On 2020-07-24 09:37 GMT   |   Update On 2020-07-24 09:37 GMT
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

வில்லியனூரில் புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையின் நடுவே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலையின் மீது காவி துண்டு அணிவிக்கப்பட்டதாக நேற்று மதியம் தகவல் பரவியது. இதை அறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிலையின் கழுத்தில் காவி வேட்டியை துண்டு போல் அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதை கண்டித்து சிலையின் முன் நடுரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காவி துண்டு அணிவித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சிலைக்கு காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் மன வேதனையை தருகிறது. இச்செயல் காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது வருத்தத்தை தருகிறது.

ஒருமைப்பாடு, ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து ஓட்டு அரசியல் பிழைப்பிற்கு சிலர் திட்டமிடுகின்றனர். சிலையை அவமதித்தவர்கள், அவர்களை பின்னாலிருந்து இயக்கியவர்களை தோலுரித்து காட்ட வேண்டும்

சிலையை அவமதித்தவர்கள் மீது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News