செய்திகள்
தந்தையின் கல்லறை அருகில் கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலை
சாயர்புரம் அருகே தந்தையின் கல்லறை அருகில் கல்லூரி மாணவர் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாயர்புரம்:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் சுந்தர்மணி. இவரது மனைவி எஸ்தர். இவர்களது மூத்த மகன் ரிச்சிஸ் (வயது 20). இவர் சாயர்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்மணி இறந்து விட்டார். இந்த நிலையில் ரிச்சிஸ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். இதனை அவரது தாய் எஸ்தர் கண்டித்து உள்ளார்.
இதில் மனம் உடைந்த ரிச்சிஸ், தங்கம்மாள்புரத்தில் உள்ள அவரது தந்தையின் கல்லறைக்கு சென்று உள்ளார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அதில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரிச்சிஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.