செய்திகள்
மோகனூரில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது
மோகனூரில் வீட்டில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:
மோகனூர் காக்காதோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் காக்காதோப்பு பகுதியில் உள்ள புதுத்தெருவில் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள தமிழ்வாணன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோகனூரை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 44), அரவிந்தன் (27), பிரபு (37), சங்கர் (30), கிஷோர்குமார் (28), சந்தோஷ்குமார் (23) மற்றும் நாமக்கல்லை சேர்ந்த சிவா (27), தேவேந்திரன் (23), சதீஷ்குமார் (27), ரஞ்சித்குமார் (34), கரூர் பள்ளாபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் (28), நாமக்கல் கணவாய்பட்டி சேர்ந்த மாரிமுத்து (27), என்.கொசவம்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (28) ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.47 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டது.