செய்திகள்
கொரோனா வைரஸ்

களியக்காவிளை அருகே அகதிகள் முகாமில் 4 பேருக்கு தொற்று

Published On 2020-07-07 11:31 GMT   |   Update On 2020-07-07 11:31 GMT
களியக்காவிளை அருகே அகதிகள் முகாமில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் 300-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
களியக்காவிளை:

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, களியக்காவிளை அருகே கோழிவிளையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் முகாமில் உள்ள 47 வயது ஆண், அவருடைய மனைவி, 24 வயது இளம்பெண், 14 வயது சிறுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அகதிகள் முகாமில் கிருமி நாசினி தெளித்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த முகாமை கிள்ளியூர் தாசில்தார் பரந்தாமன், வருவாய் ஆய்வாளர் பரந்தாமன், சுகாதார ஆய்வாளர்கள் சத்தியநேசன், விஜீ, அஜின் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனையடுத்து 300-க்கும் மேற்பட்ட நபர்கள் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் அகதிகள் முகாமில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளியே இருந்து யாரும் உள்ளேயும் வர முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் களியக்காவிளை அருகே துடிக்கவிளை பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இவர் கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும் அவருடைய பெற்றோர், கணவர், 3 சகோதரிகள் உள்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News