செய்திகள்
குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்
போக்சோ சட்டத்தின் கீழான வழக்குகளை தனிக்கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், அடுத்த நயினார்குப்பத்தில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கூறியததால் வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டது. 2 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீராமன் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை புகார் அளித்துள்ளார்.
குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதேபோன்று ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது காவல்துறை உயரதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் தமது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் மகளிருக்கு எதிரான வழக்குகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து சீராய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, போக்சோ சட்டத்தின் கீழான வழக்குகளை தனிக்கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.