செய்திகள்
பண மோசடி

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி

Published On 2020-06-29 14:31 GMT   |   Update On 2020-06-29 14:31 GMT
மன்னார்குடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த கொடைக்கானலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராமானுஜம் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(வயது 62). இவர் கடந்த 18-ந்தேதி மன்னார்குடி பெரிய கடை தெருவில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த ஒருவரிடம் செல்லத்துரை ரூ.2 ஆயிரம் எடுத்து தரும்படி கூறினார். இதையடுத்து அந்த நபர் செல்லத்துரைக்கு ரூ.2 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் எடுத்து கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு செல்லத்துரை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லத்துரை அவரிடமிருந்த ஏ.டி.எம். கார்டை எடுத்து பார்த்த போது, பணம் எடுத்து கொடுத்தவர் செல்லத்துரையின் கார்டை வைத்து கொண்டு வேறு ஒரு கார்டை கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செல்லத்துரை மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி ஏ.டி.எம். அறையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று மன்னார்குடி ஓட்டல் ஒன்றில் அந்த நபர் சாப்பிட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொடைக்கானலை சேர்ந்த அல்போன்ஸ் (40) என்பதும், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து முதியவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்ததும், கும்பகோணத்தில் விடுதியில் தங்கி இருந்து மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அல்போன்சை கைது செய்து அவரிடம் இருந்த 20 ஏ.டி.எம். கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News