செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

எந்த பரிசோதனை அடிப்படையில் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்குகிறீர்கள்?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Published On 2020-06-22 09:46 GMT   |   Update On 2020-06-22 09:46 GMT
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு எந்த பரிசோதனையின் அடிப்படையில் கபசுரக் குடிநீர் வழங்குகிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை:

சித்த மருத்துவப் பொடியை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த  நீதிபதிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கொரோனா தொற்றுக்கு எந்த அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் பரிந்துரைக்கப்படுகிறது? சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது?

அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை இதுவரை ஆய்வு செய்யாதது ஏன்? கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயத்தை, எந்த பரிசோதனையின் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? 

ஒருபுறம் சித்த மருந்தை வாங்கிக் கொண்டு, மறுபுறம் அதில் கண்டுபிடிக்கும் மருந்தை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? என கேள்வி எழுப்பிய நிதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், ஆங்கில மருத்துவர்களின் வியாபார உத்தி, லாப நோக்கால் இயற்கை மருத்துவம் அழிந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News