செய்திகள்
உடுமலை சங்கர் கொலை வழக்கு- ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்கிறது அரசுத் தரப்பு
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
சென்னை:
திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு முன்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிரிழந்தாா்.
மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வழக்கு வலுவாக இருந்ததால் தான் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்றும், இப்போது கவுசல்யாவின் தந்தை விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.