செய்திகள்
கொரோனா வைரஸ்

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைப்பு

Published On 2020-06-08 11:07 GMT   |   Update On 2020-06-08 11:07 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணி குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரிப்பது தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களுக்கு அதிகளவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் ரோவர் கலைக்கல்லூரி, பெரம்பலூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் திருமாந்துறை விஸ்டம் மெட்ரிக் பள்ளி, வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி, வேப்பூர் ஒன்றியத்தில் திருமாந்துறை ஆன்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி, வேப்பூர் அரசு கலைக்கல்லூரி, காடூர் அரசுப்பள்ளி, கீழப்பெரம்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆலத்தூர் ஒன்றியத்தில் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 12 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

‘இந்த முகாம்களில், வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் என, இதுவரையில் 352 பேர் தனிமைப்படுத்தப்பட்டு 318 பேர் அவரவர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடு, வெளி மாநிலம், சென்னை மற்றும் இதர மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு வரும் பொதுமக்கள் அருகில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு தாமாகவே முன்வந்து, தங்களை தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அல்லது 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும். அங்கு, 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவரும் பட்சத்தில் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News