செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-06-08 08:22 GMT   |   Update On 2020-06-08 08:22 GMT
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இரணியலில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மைலாடி, பொன்னமராவதியில் தலா 4 செமீ, நாகர்கோவில், கள்ளக்குறிச்சி, தேவலா, அயின்குடி, மலையூரில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

ஆந்திரா, கேரளா, கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும். குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3 முதல் 3.4 மீட்டர் வரை ஒருசில நேரங்களில் எழும்பக்கூடும். எனவே, 12ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News