பல்லடம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின்பேரில், பல்லடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் கிராமங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பல்லடம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் நின்றிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ்(30), ரங்கநாதன்(36), மணிகண்டன்(45) என்பதும், பஸ் நிறுத்தத்தில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து145 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல ராசாகவுண்டன்பாளையம், மாணிக்கபுரம் பகுதிகளில் மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்றதாக உதயம் முத்துமாரி, பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 75 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.