செய்திகள்
கோப்புப்படம்

காதலியை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாயை வெட்டிய மகன்

Published On 2020-05-26 09:33 GMT   |   Update On 2020-05-26 09:33 GMT
கன்னியாகுமரி அருகே காதலியை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாயை வெட்டிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் என்ற சுரேந்திரன்.(வயது 59).

இவரது 2-வது மனைவி ஜெயந்தி (50). இவர்களின் மகன் மது குமார் (30).

மது குமார் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறினார். இதற்கு மது குமாரின் தாயார் ஜெயந்தி மறுத்தார். இதனால் மதுகுமாருக்கும் அவரது தாயார் ஜெயந்திக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

மது குமார் நேற்றும் இது தொடர்பாக தாயாரிடம் கேட்டார். அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியே சென்ற மதுகுமார் பின்னர் குடிபோதையில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அங்கிருந்த தாயாரிடம் மீண்டும் தகராறு செய்தார். மேலும் வீட்டில் இருந்த அரிவாளால் தாயார் ஜெயந்தியை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது தலை, முகம்,கைகளில் படுகாயம் ஏற்பட்டது.

அரிவாள் வெட்டுப்பட்ட ஜெயந்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஜெயந்தியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து ஜெயந்தியின் கணவர் நாகராஜன், கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயந்தியின் மகன் மதுக்குமாரை கைது செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News