செய்திகள்
ரேஷன் கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
திண்டிவனம் அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள புறங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 43). இவர் கீழ்ஆதனூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றுகிறார்.
சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது கீழ்ஆதனூரை சேர்ந்த சுப்புராயன் மகன் ராமகிருஷ்ணன் (33), மணிகண்டன் (32) ஆகியோர் ரேஷன் கடைக்கு சென்று எடை குறைவாக பொருட்கள் வழங்குவதாக கூறி சின்னப்பனை தாக்கினர். மேலும் பொருட்கள் எடைபோடும் எந்திரத்தை உடைத்து, அங்கிருந்த ரூ.3 ஆயிரத்தை அவர்கள் எடுத்துச்சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.