செய்திகள்
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:
கொரோனா அச்சத்தால் நிறுத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்பபடும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற்ததில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
தேர்வை ரத்து செய்யும்படி மாணவர்களோ, ஆசிரியர் சங்கங்கள் தரப்பிலோ நீதிமன்றத்தை அணுகவில்லை. தேர்வுக்கு தொடர்பு இல்லாத நபர் தாக்கல் செய்த வழக்கை பொதுநல வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினார். மனுவை திரும்ப பெற நீதிபதிகள் அனுமதி அளித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.