செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பத்திரப்பதிவு அலுவலகம் இயங்க தடை கோரிய மனு தள்ளுபடி

Published On 2020-05-01 10:06 GMT   |   Update On 2020-05-01 10:06 GMT
ஊரடங்கு காலத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்குவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர ஒரு சில குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் வேல்முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழகம் முழுவதிலும் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதும் கண்காணிப்பதும் இயலாத காரியம் என்பதால் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது, பத்திரப் பதிவு அலுவலகங்கள் ஊரடங்கு நேரத்தில் செயல்பட்டால் கொரொனோ தொற்று பரவ வாய்ப்புள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கால் ஏற்பட்டுட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பத்திரப்பதிவு அலுவலகங்களால் வரும் வருவாய் அவசியம் என்றும், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் கடன் பெற நிறுவனங்கள் பதிவு செய்வதற்கு பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுவது அவசியமானது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே அனுமதித்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு துறை செயல்படுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உறுதி அளித்தது.

தமிழக அரசு அளித்த இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

Similar News