செய்திகள்
தற்கொலை

காங்கயம் அருகே விவசாயி உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-04-26 09:25 GMT   |   Update On 2020-04-26 09:25 GMT
காங்கயம் அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ராமபட்டிணத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது72). விவசாயி. இவருக்கு வள்ளியாத்தாள் என்ற மனைவியும், வேலுச்சாமி(48), குருசாமி(45) என 2 மகன்களும் உள்ளனர். ராமசாமிக்கு அந்த பகுதியில் 10 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ராமசாமி தனது நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க அனுமதி அளித்தார்.

அதற்காக அவருக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 497 வழங்கப்பட்டது. இந்த தொகையையும், 10 ஏக்கர் நிலத்தை பாதி, பாதியாக பிரித்து தருமாறு ராமசாமியின் மகன்கள் தந்தையிடம் கேட்டு வந்துள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் தந்தை, மகன்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிலத்தை பிரித்து கொடுக்காமலும், பணத்தை தராமலும் இழுத்தடித்து வந்த தந்தைக்கு மகன்கள் 2 பேரும் கடந்த 6 மாதமாக உணவு வழங்க வில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த ராமசாமி நேற்று தனது நிலத்திற்கு சென்றார்.

வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட அவர் தனது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரத்தில் கயிற்றை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News