செய்திகள்
முழு ஊரடங்கு- சென்னையில் 4 நாட்களுக்கு அவசர பாஸ் வழங்கும் பணி நிறுத்திவைப்பு
சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் அவசர பாஸ் வழங்கும் பணி நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது அவசர தேவை பயணங்களுக்கு அரசு சார்பில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆன்லைன் மூலமாகவும் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டன.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, கோவை, மதுரையில் வைரஸ் தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் நாளை முதல் புதன்கிழமை வரை 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சேலம், திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும்.
எனவே, முழு ஊரடங்கின்போது வாகன போக்குவரத்தை முழுவதும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னையில் அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கும் பணியும் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.