நாங்குநேரி அருகே போலி டாக்டர் கைது
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிறுமளஞ்சி அரசு ஆரம்ப சுகாதார மைய டாக்டர் கண்ணன், நாங்குநேரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் ஆகியோர் தளபதிசமுத்திரம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு நபர், ஒத்தக்கடை ராமகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் உள்ள சுப்பிரமணியன் மனைவி ராஜகுமாரி என்பவருக்கு ஊசி போட்டுக் கொண்டு இருந்தார்.
இதனை டாக்டர் குழுவினர் பார்த்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஏர்வாடி சேனையர் வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 60) என்பதும், அவர் ஆங்கில மருத்துவம் படிக்காமல் பி.யு.சி. மட்டும் படித்து விட்டு தளபதிசமுத்திரம், வாகைகுளம், சமாதானபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று ஆங்கில மருந்துகளை கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணனையும், அவர் வைத்திருந்த ஊசி மருந்துகள், மாத்திரைகளையும் ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.