தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனைக்காக 108 பேர் அனுமதி
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் வியாழக்கிழமை (ஏப்.2) வரை 230 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு சளி மாதிரி எடுத்து திருவாரூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்களில் 150 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 80 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இவர்களுடைய சளி மாதிரி எடுத்து, திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வக முடிவுக்காக காத்திருக்கிறோம் என மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 108 ஆக உயர்ந்தது. இவர்களில் 18 பேர் பெண்கள், இதில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 77 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட கும்பகோணம் நபருக்கு இரண்டாம் கட்டப் பரிவோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூன்றாம் கட்டப் பரிசோதனைக்காக அவருடைய சளி மாதிரி எடுத்து திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் மருத்துவக்கல்லூரி முதல்வர்.