செய்திகள்
முதியோருக்கான உதவித்தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி
முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை:
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்துப் பணிகளும் முடங்கி உள்ளன.
கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலாலை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு அறிவித்த நேரத்தை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். முதியோருக்கான உதவித்தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் 32 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வட்டாட்சியர், வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு ஆட்சியர்கள் தக்க அறிவுரைகளை வழங்குவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.