செய்திகள்
கூலி தொழிலாளர் நடைபயணம் (கோப்புப்படம்)

கடலூருக்கு 100 கி.மீ தூரம் நடைபயணமாக வந்த 25 கூலி தொழிலாளர்

Published On 2020-03-31 09:42 GMT   |   Update On 2020-03-31 09:42 GMT
திருவள்ளூரில் இருந்து கடலூருக்கு 100 கி.மீ தூரம் நடைபயணமாக வந்த 25 கூலி தொழிலாளர் குடும்பத்தினர் வந்தவாசியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வந்தவாசி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகு பெருமாள் குப்பம் கிராமத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் பிழைப்பிற்காக திருவள்ளூரில் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகு பெருமாள் குப்பம் பகுதியை சேர்ந்த 11 பெண்கள், 12ஆண்கள், 2 குழந்தைகள் உட்பட 25 பேர் கடந்த 29-ந்தேததி அதிகாலை 3 மணி அளவில் திருவள்ளூர் பகுதி அருகே உள்ள மணவாள நகரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி நோக்கி நடந்து வந்தனர்.

வந்தவாசி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சுமார் 100 கிலோ மீட்டர் வரை நடந்து வந்தது தெரிய வந்தது. தகவலறிந்த வந்தவாசி தாசில்தார் நரேந்திரன், டி.எஸ்.பி. தங்கராமன் ஆகியோர் 25 பேர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இன்று வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி தலைமையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து தடையில்லா அனுமதி சான்று வழங்கப்பட்டு வேன் மூலம் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகு பெருமாள் குப்பம் கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News