செய்திகள்
வத்தலக்குண்டு: பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு
முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு கண்ணகி தெருவை சேர்ந்தவர் லட்சுமி(65). இவர் இன்று காலை காய்கறி வாங்க மார்கெட்டுக்கு சென்றார். காளியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த டிப்-டாப் உடையணிந்த ஆசாமி லட்சுமியிடம் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை, பஸ் பாஸ் பெற்றுத்தருவதாக கூறினார். மேலும் அரசு உதவித்தொகை வாங்க கழுத்தில் நகை அணியக்கூடாது. அதை எடுத்து பத்திரமாக வையுங்கள் என கூறியுள்ளார்.
இதை நம்பிய லட்சுமி நகையை கழற்றி சேலை முந்தாணையில் வைக்க முயன்றார். இந்த வேளையில் அந்த நபர் லட்சுமியிடம் நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதனால் பதறிய லட்சுமி திருடன், திருடன் என சத்தம் போட்டார். உடனே அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதுபற்றி வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நூதனமுறையில் நகை பறித்து சென்ற மர்மநபர் யார்? இதுபற்றி கண்காணிப்பு காமிராவில் ஏதும் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.