செய்திகள்
கைது

ஆண்டிப்பட்டியில் பெண் சிசு கொலை: எருக்கம் பால் கொடுத்து கொன்ற தாய், பாட்டி கைது

Published On 2020-03-19 13:02 GMT   |   Update On 2020-03-19 13:02 GMT
ஆண்டிப்பட்டியில் 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம் பால் கொடுத்து கொன்ற தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா (வயது 29). இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 10 மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 26-ந் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 6 நாட்களே ஆன நிலையில் அந்த குழந்தை திடீரென மர்மமாக இறந்து விட்டது. அந்த குழந்தையின் உடலை வீட்டுக்கு அருகிலேயே புதைத்து விட்டனர்.

இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

குழந்தை நல அலுவலர் ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் கவிதா தெரிவிக்கையில், 26-ந் தேதி தனக்கு தேனி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்ததாகவும், 28-ந் தேதியே ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பி விட்டதாகவும் கூறினார்.

கடந்த 2-ந் தேதி தனது வீட்டில் வைத்த கோழிக்குழம்பை சாப்பிட்ட போது அது தனக்கு பிடிக்காமல் போனதால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது என்றும் அந்த நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தையின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது என்று கூறினார்.

அன்று இரவு குழந்தை இறந்து விட்டதால் யாருக்கும் தெரிவிக்காமல் இரவு 12 மணியளவில் வீட்டுக்கு அருகிலேயே புதைத்து விட்டதாக கூறினார். ஆனால் 3-வது பெண் குழந்தை பிறந்ததால் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால் கிராம நிர்வாக அதிகாரி தேவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தாசில்தார் முன்னிலையில் அரசு டாக்டர்கள் இன்று அந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர்.

குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த போது வயிற்றில் வி‌ஷம் கலந்திருந்தது தெரியவந்தது. பின்னர் மீண்டும் கவிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதில் தனது மாமியார் செல்லம்மாள் 3-வதாக பிறந்த பெண் குழந்தையை கொலை செய்து விடுமாறு கூறியதாகவும், அவரது பேச்சை கேட்டு எருக்கம்பால் கொடுத்து கொன்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து ராஜதானி போலீசார் குழந்தையை கொன்ற தாய் கவிதா, பாட்டி செல்லம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ஏற்கனவே மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் சிசு கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News