செய்திகள்
தர்மபுரி பஸ் நிலையத்தில் வக்கீல் மர்ம மரணம்
தர்மபுரி பஸ் நிலையத்தில் வக்கீல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 52). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் வெற்றிவேல் நேற்று மாலை சொந்த வேலையின் காரணமாக பாலக்கோடு வரை சென்றிருந்தார். பின்னர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தர்மபுரி பஸ்நிலையத்தில் வெற்றிவேல் இறந்து கிடப்பதாக சித்ராவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்த சித்ரா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெற்றிவேலின் உடலை பார்த்து கதறி அழுதார். இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சித்ரா எனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.