செய்திகள்
காரில் இருந்து இறங்கி வயலுக்கு சென்று விவசாயிகளுடன் நெல் நாற்று நட்டு முதலமைச்சர் உரையாடிய காட்சி.

வயலுக்கு சென்று நாற்று நடவில் ஈடுபட்ட முதலமைச்சர்

Published On 2020-03-07 06:01 GMT   |   Update On 2020-03-07 06:01 GMT
நீடாமங்கலத்தில் காரில் இருந்து இறங்கி வயலுக்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாற்று நடவில் ஈடுபட்டார். இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர்.
திருவாரூர்:

நாகை மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கி வைக்க நீடாமங்கலம் வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நீடாமங்கலம் அடுத்த கொண்டையாறு கிராமத்தில் வயலில் பெண்கள் நாற்று நட்டு கொண்டிருப்பதை பார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக காரை நிறுத்த சொன்னார். பின்னர் காரை விட்டு இறங்கி அந்த வயலுக்கு நடந்து சென்றார்.

முதலமைச்சரை பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து முதலமைச்சர் வேஷ்டியை மடித்து கட்டி வயலில் இறங்கி நாற்று நட்டார். மேலும் விவசாய வேலைகளை செய்தார். இதனை பார்த்த பெண்கள், எங்களுக்கு விவசாயி முதலமைச்சராக கிடைத்திருப்பதற்கு பெருமை கொள்கிறோம். உங்களால் விவசாயத்துக்கு பெருமை என்று முதலமைச்சரிடம் மகிழ்ச்சி பொங்க கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்போதும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவசாயிகளிடம் பேசி குறைகளை கேட்டறிகிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. தொடர்ந்து ஜெயலலிதா ஆசியோடு நடக்கும் அ.தி.மு.க. அரசு விவசாயம் சார்ந்த நல்ல திட்டங்களை செயல்படுத்தி கொண்டே இருக்கும். விவசாயம் தான் நாட்டின் உயிர்நாடி என்றார்.
Tags:    

Similar News