கொடைக்கானலில் திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசம்
கொடைக்கானல்:
கொடைக்கானல் இந்திரா நகரில் சண்முகத்தாய் என்பருக்கு சொந்தமான வீடு உள்ளது. இன்று காலை அவரது மருமகன் தனது 2 குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக அழைத்துச் சென்றார். அப்போது அவரது வீட்டில் தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ வேகமாக பரவியதால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் தீ அருகில் இருந்த கமல வேணி என்பவரது வீட்டுக்கும் பரவியது.
இதனால் 2 வீடுகளிலும் இருந்த பீரோ, கட்டில், துணிகள் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர்.
இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் சண்முகத்தாயின் வீட்டுக்கு மின் இணைப்பு இல்லை. இதனால் அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளனர்.
அதனை காலையில் அணைக்காமல் சென்றதால் தவறி விழுந்து வீட்டுக்குள் தீ பரவியது தெரிய வந்தது. விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.