டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்- திருநாவுக்கரசர்
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கேரளா, பீகார் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வில்லை. அதேபோல தமிழகத்திலும் பின்பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இப்பிரச்சினையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லியில் பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளி வளாகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும், ஜாதி, மத அடிப்படையில் சட்டங்கள் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ராஜராஜ சோழன் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி வருகிறார். அவர் இதுபோன்ற தமாஷ் பேச்சுகளை அடிக்கடி பேசி வருவது வாடிக்கையாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.