செய்திகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு- முஸ்லிம்கள் தர்ணா
விழுப்புரம் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரத்தில் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இப்ராஹீம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தரமணி யாசிர் கண்டன உரையாற்றினார். இதில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அப்துல்லத்தீப் நன்றி கூறினார்.
இதேபோல் திண்டிவனம் வண்டிமேட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் முகம்மதுகான் தலைமையிலும், கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் நகர தலைவர் சல்மான் தலைமையிலும் தர்ணா போராட்டம் நடந்தது.
அனுமதியின்றி தர்ணா போராட்டம் நடத்தியதாக 450 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.