விருகம்பாக்கம் அருகே கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது
போரூர்:
விருகம்பாக்கம் அய்யப்பா நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று முன்தினம் மதுரவாயல் சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2பேர் ஆறுமுகத்திடம் முகவரி கேட்பது போல நடித்து திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் ரூ.550 பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் கூச்சலிட்டார். உடனடியாக அங்கு நின்ற லாரி டிரைவர்கள் இருவரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தர்ம அடி கொடுத்து மதுரவாயல் போலீசில் ஓப்படைத்தனர்.விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது ஓட்டேரியைச் சேர்ந்த முருகன் தண்டையார்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல்கரீம் என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணம், செல்போன், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.