செய்திகள்
விபத்து

செங்கோட்டையில் விபத்து- முதியவர் பலி

Published On 2020-02-26 09:50 GMT   |   Update On 2020-02-26 09:50 GMT
செங்கோட்டையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்கோட்டை:

செங்கோட்டையை அடுத்த புளியரை தாட்கோ நகரை சேர்ந்தவர் சோனி (வயது 25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இசைவாணி (24) என்ற மனைவியும், ஜெரோன் அந்தோணி என்ற 1 வயது குழந்தையும் உள்ளனர். சோனியின் உறவினர் எட்வர்டு (75). இவருக்கு நேற்று திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சோனி, அவருடைய மனைவி, குழந்தை மற்றும் உறவினரான டேனியல் (40) ஆகியோர் ஒரு காரில் எட்வர்டை அழைத்து கொண்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவரை காண்பித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு விலக்கில் சென்ற போது அங்கு முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரியின் பின் பகுதியில் பலமாக மோதியது.

இதில் காரில் இருந்த எட்வர்ட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் இருந்த சோனி, இசைவாணி, குழந்தை ஜெரோன் அந்தோணி, டேனியல் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சோனி உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான எட்வர்ட் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த இதையடுத்து 4 பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News