செய்திகள்
மரவள்ளிகிழங்கு

மரவள்ளிகிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-02-25 14:05 GMT   |   Update On 2020-02-25 14:05 GMT
கரூர் மாவட்டத்தில் மரவள்ளிகிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல் வேட்டமங்கலம், ஒரம்புபாளையம், ஓலப்பாளையம், நல்லிக் கோவில், கவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை நாமக்கல் மாவட்டம், புதன் சந்தை, புதுச்சத்திரம், செல்லப் பம்பட்டி, மின்னாம்பள்ளி, கீரனூர், நாமகிரி பேட்டை, தொ.ஜேடர்பாளையம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயார் செய்யும் கிழங்கு மாவு மில்களுக்கு புரோக்கர்கள் மூலம் டன் கணக்கில் வாங்கி அனுப்பி வைக்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை (டார்ச்) பாய்ண்ட் அடிப்படையில் வாங்குகின்றனர். 

கிழங்குகளில் எத்தனை பாய்ண்ட் டார்ச் சத்து இருக்கின்றதோ? அதற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல் ஜவ்வரிசி விலை உயரும் போது மரவள்ளி கிழங்குக்கு விலை உயர்வும், வீழ்ச்சி அடையும் போது விலை குறைத்தும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜவ்வரிசி விலையை சேகோசர்வ் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சில்லறை வியாபாரிகள் மரவள்ளிக்கிழங்குகளை சாக்குகளில் கொண்டு சென்று ஊர்ப்பகுதிகளில் பொதுமக்களுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். 

கடந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ. 8 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர். சிப்ஸ் தயாரிப்போர் ஒரு டன் ரூ.9,500 க்கு வாங்கிச் சென்றனர். இந்த வாரம் ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.8500-க்கும் அதேபோல் சிப்ஸ் தயாரிப்போர் ஒரு டன் ரூ.10 ஆயிரத்துக்கும் வாங்கிச்சென்றனர். ஜவ்வரிசி விலை உயர்ந்து வருவதால் மரவள்ளிகிழங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News