செய்திகள்
ஸ்ரீரங்கம் அருகே பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை கரிகாலன் காலனியை சேர்ந்தவர் ரமேஷ், செங்கல் தொழிலாளி. இவரது மகன் அர்ஜுனன் (வயது 19 ). நேற்று முன்தினம் இரவு அர்ஜுனன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அர்ஜுனன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 10-ம்வகுப்பு வரை படித்து இருந்த அர்ஜுனன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது.