சித்தையன்கோட்டையில் வீடு புகுந்து திருடிய பெண் சிக்கினார்
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே ஆத்தூர், சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து மர்மநபர்கள் திருட்டில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சேடப்பட்டி பகுதியில் மர்மநபர் சுற்றித்திரிந்தார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் போடியை சேர்ந்த ஆறுமுகம் என்பதும், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேடப்பட்டியில் நேற்று மர்மபெண் ஒருவர் சுற்றி திரிந்தார். இந்த நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தார். அங்கு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை திருடினார். தகவல் அறிந்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். உடனே அந்த பெண்ணை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்பு அவரை செம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் வத்தலக்குண்டுவை சேர்ந்த ஜெயராஜ் மனைவி சாந்தி(43) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.