செய்திகள்
சாலை மறியல்

தஞ்சை பூக்குளத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-02-17 11:44 GMT   |   Update On 2020-02-17 11:44 GMT
தஞ்சை பூக்குளத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை பூக்குளத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் அந்த தண்ணீரானது குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படவில்லை என கூறி வந்தனர். இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பூக்குளம் பகுதி மக்கள் அங்கு உள்ள பழைய திருவையாறு ரோட்டில் காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுத்தமான தண்ணீர் வழங்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தகவலறிந்த டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர் மாநகராட்சி அலுவலர்களிடம் பழுதடைந்த குழாணை அகற்றிவிட்டு புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், கழிவுநீர் கலக்காமல் சுத்தமான குடிநீர் வழங்குமாறு அறிவுறுத்தினார். அதன்பேரில் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று கொண்ட மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News