செய்திகள்
பலியான கர்ப்பிணி பெண்

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பரிதாப பலி

Published On 2020-02-15 16:45 GMT   |   Update On 2020-02-15 16:45 GMT
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை:

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நெமிலேரி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 25). இவருடைய மனைவி தாமரை (19). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது தாமரை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று சித்தாண்டபுரத்தில் உள்ள தாமரையின் பெற்றோர் வீட்டில் இருந்து அவரும், குமாரும் மோட்டார்சைக்கிளில் நெமிலேரி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை குமார் ஓட்டி சென்றார். தாமரை பின்னால் அமர்ந்திருந்தார்.

தேன்கனிக்கோட்டை அருகே சாலிவரம் கிராமம் பக்கமாக வந்த போது பின்னால் அமர்ந்திருந்த தாமரை எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தாமரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று தாமரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News