செய்திகள்
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு- விடைத்தாள்களை மாற்ற உதவிய கார் டிரைவர் கைது
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் விடைத்தாள்களை காரில் எடுத்து செல்ல உதவிய கார் டிரைவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரி தேர்வுகளில் முறைகேடு நடந்து இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் சமீபத்தில் கண்டுபிடித்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குரூப்-2ஏ தேர்வு மோசடி தொடர்பாக 19 பேரும், குரூப் 4 தேர்வு மோசடி தொடர்பாக 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அதிகாரி முறைகேட்டில் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.
சென்னை முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமார் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தனுடன் இணைந்து விடைத்தாள்களை திருத்தி குறுக்கு வழியில் பலரை தேர்ச்சி பெற வைத்துள்ளனர்.
2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் 42 பேர் மோசடியாக தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் பத்திரப்பதிவு துறை, தலைமை செயலகம், ஆர்.டி.ஓ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் மீதான கைது நடவடிக்கை முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது.
அரசு பணிகளில் உள்ள ஒவ்வொருவராக தேடிப்பிடித்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குரூப் 4 விடைத்தாள்களை மாற்ற உதவியதாக கார் டிரைவர் மரியலிஜோஸ்குமாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஜெயக்குமார் கார் பழுதானதால் ஓம்காந்தனின் காரில் விடைத்தாள்களை கொண்டு செல்ல உதயவியதாக புகார் வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.