செய்திகள்
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பெற்று தருவதாக மோசடி- போடி வாலிபர் கைது
போடி அருகே வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து தருவதாக பல லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ராஜபிரபு. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 36) என்பவரிடம் தனது மோட்டார் சைக்கிள் இன்சூரன்சுக்கு பணம் கட்டி இருந்தார்.
தற்போது மீண்டும் அதனை புதுப்பித்தல் செய்வதற்காக வேறு ஒரு இன்சூரன்ஸ் அதிகாரியை தொடர்பு கொண்டார். அப்போது 2 வருடங்களாக உங்கள் வாகனத்துக்கு இன்சூரன்ஸ் தொகை செலுத்த வில்லை என தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜபிரபு, சிவக்குமாரிடம் சென்று கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
இது குறித்து ராஜபிரபு போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சசிகுமார் பல்வேறு நபர்களிடம் இது போல இன்சூரன்ஸ் எடுத்து தருவதாக பல லட்சம் வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.