செய்திகள்
கொலை

பரமக்குடியில் ஜாமீனில் வந்த ரவுடி கொடூரக்கொலை

Published On 2020-02-07 10:00 GMT   |   Update On 2020-02-07 10:00 GMT
ஜாமீனில் வெளியே வந்த ரவுடி தலை சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தண்ட்ராபட்டணத்தை சேர்ந்தவர் மங்களநாதன். இவரது மகன் கார்த்திக் (வயது 24). இவர் மீது போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு குற்ற சம்பவம் தொடர்பாக கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர், ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற கார்த்திக் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார். ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு வந்த அவர், வீட்டுக்கு செல்லாமல் காக்கா தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியில் இன்று காலை கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை கற்களால் தாக்கியதில் சிதைந்திருந்தது. மேலும் வயிற்றுப்பகுதி கிழிக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் வெட்டு காயங்களும் காணப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் மற்றும் பரமக்குடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் உதவி இயக்குனர் மினிதா மற்றும் ஊழியர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த கார்த்திக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் கார்த்திக்கை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News