செய்திகள்
நகை பறிப்பு

திருமுல்லைவாயலில் ஆசிரியையிடம் வீடு புகுந்து நகை பறிப்பு

Published On 2020-02-05 06:53 GMT   |   Update On 2020-02-05 06:55 GMT
திருமுல்லைவாயலில் ஆசிரியையிடம் வீடு புகுந்து நகை பறித்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி:

ஆவடியை அடுத்த அண்ணனூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி மேனகா . இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் இரவு வீட்டு முன்பு உள்ள அறையில் குழந்தையுடன் இருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென மேனகாவின் வீட்டிற்குள் நுழைந்து அவரது கழுத்தில் இருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து தப்பி ஓடிவிட்டார்.

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் அம்பிகை நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மனோஜ்குமார். இவர் வீட்டிற்கு அருகே செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவரது கையிலிருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். அண்ணனூர் 18-வது குறுக்கு தெருவை சேர்ந்த சுலோச்சனா என்பவர் வீட்டின் முன்பு ஊஞ்சலில் உட்கார்ந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

ஒரே நாளில் அடுத்ததடுத்து நடந்த இந்த 3 சம்பவங்கள் குறித்து திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் 3 கொள்ளையிலும் ஈடுபட்டது.

வில்லிவாக்கம் தெக்கா குளம், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த பாபு, ஜி.கே.எம் காலனியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 சவரன் தாலி செயின் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட பாபு குற்ற வழக்கில் கைதாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வந்து உள்ளார். அவர் ஆவடியை அடுத்து கோனாம்பேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குற்றசம்பங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிந்தது.

Tags:    

Similar News