செய்திகள்
சரக்குவேனில் எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு படைவீரர்கள் அணைத்தபோது எடுத்த படம்.

மின்கம்பி உரசியதால் வைக்கோல் போர் ஏற்றி வந்த சரக்குவேன் தீயில் எரிந்து நாசம்

Published On 2020-02-04 17:54 GMT   |   Update On 2020-02-04 17:54 GMT
மின்கம்பி உரசியதால் வைக்கோல்போர் ஏற்றி வந்த சரக்குவேன் தீயில் எரிந்து நாசமானது.
லாலாபேட்டை:

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் பரணி (வயது 25). சரக்குவேன் டிரைவர். இவர் ஒரு சரக்கு வேனில் வைக்கோல்போர் ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம், லாலாபேட்டையை சேர்ந்த ராமநாதன் என்பவரது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது லாலாபேட்டை கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, தாழ்வாக சென்ற மின் கம்பி மீது வைக்கோல்போர் உரசியதில் தீ பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து உடனடியாக பரணி இறங்கி உயிர் தப்பினார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல்போர் மற்றும் சரக்குவேன் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் சின்ன சக்கையா, கிராம நிர்வாக அதிகாரி லிங்கேஸ்வரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரே‌‌ஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News