அதிராம்பட்டினத்தில் வெயில் தாக்கம்: விழுப்புரம் பகுதியில் இருந்து தர்ப்பூசணி விற்பனைக்கு வரத்து
அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஜூன் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த நாட்களில் திண்டுக்கல், ராமநாதபுரம் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து தர்பூசணி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முடிந்து தற்போதுதான் பிப்ரவரி ஆரம்பித்துள்ளது. இருந்தும் முன்கூட்டியே கோடைகாலத்தைப்போல் வெயில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து லாரிகளில் தர்பூசணிகள் அதிராம்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்ளமுடியும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.