கோட்டாரில் ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 43) ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வடலி விளை பகுதியில் இறக்கி விட்டுவிட்டு நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் அவரது ஆட்டோவை நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
அவர்கள் வெளியூரில் இருந்து ஆட்டோவை கொண்டு வந்து எப்படி ஓட்டலாம் என்று கூறி தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசில் சுரேஷ்குமார் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் சுரேஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டு, ஆட்டோ கண்ணாடியை உடைத்தது வைத்திலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (35), புவனேஸ் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.